ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டுப் பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை, பிப். 12- காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம் பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதி யரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டுப் பணத்தை ஒரு மாதத் திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மதுரையை சேர்ந்த ஏ.முனியாண்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாள ராக  பணியாற்றினேன். 31.5.1996ல் ஓய்வு பெற்றேன். எனது பென்ஷன் பணத்திலிருந்து மாதம் ரூ.150 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தேன். நினைவிழந்து சிவகங்கை சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ரூ.92,535க்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. இதை வழங்கக்கோரி விண்ணப்பித்தேன்.
நான், சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை, அங்கீகார பட்டியலில் இல்லையெனக்கூறி என் விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அளவிலான குழுவிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த 26.10.2016 இல் நிராகரித்து நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து,  பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
காப்பீட்டு திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சி ஊழியர்க ளுக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவ தில்லை. காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் மருத்துவ செலவை வழங்க மறுத்த நிதித்துறை (பென்ஷன்) செயலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் மருத்துவ செலவுக்கான பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
-விடுதலை,12.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக