சமூக ஊடக செயற்பாட்டாளர் குழு(SMAG), வழக்குரைஞர் பு. பாலகோபால் அறக்கட்டளை இணைந்து நடத்திய
நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 07.02.2026ஆம் நாள் நடைபெற்றது.
வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு ) வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) அவர்கள் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை) தொடக்க உரையாற்றினார். திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) தலைமையில் இந் நகழ்ச்சி நடைபெற்றது. : தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர். கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) நன்றி உரையாற்றினார்.
கருத்தரங்கில் முழுமையாக பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து 29 சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்பு சட்டங்களாக ஒன்றிய அரசு 21.11.2025 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
1. ஊதிய சட்டம் - 2019
2. தொழில் உறவு சட்டங்கள் -2020
3. சமூக பாதுகாப்பு சட்டம் - 2020
4. பணியிட பாதுகாப்பு சட்டம் மற்றும் பணிச் சூழல் சட்டம் - 2020
இட் சட்டங்கள் குறித்த நன்மை தீமைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது.
புதிய நான்கு சட்டங்களில் உள்ள சில பகுதிகளை பற்றி பார்ப்போம்:
1. ஊதியம்
'அனைத்து தொழிலாளர்களுக்கும் 'குறைந்தபட்ச ஊதியம்' உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று கூறுகிறது.
1(அ) அடிப்படை ஊதியம்
'மொத்த சம்பளத் தொகையில் அடிப்படை ஊதியம் 50 விழுக்காடு இருக்க வேண்டும்'.
இது தீர்ப்புகளில் சொல்லப்பட்டது தான். அதை சட்டமாக மாற்றி உள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியம் நடைமுறையில் உள்ளது.
தொழிற்சாலை பணியாளர்களுக்கு மட்டும்தான் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2. சேர்க்கை ஆணை மடல்
தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்போது 'பணி நியமன ஆணை'வழங்கப்பட வேண்டும்' என்று சொல்கிறது.
பொதுவாக தொழிற்சாலைகளில் முதலில் தற்காலிக தொழிலாளர்களாக சேர்ந்து கொள்கின்றனர். பிறகு தனக்கு ஏற்புடையவராக இருந்தால் தொழில் பழகுநர் கடிதம் கொடுத்து; பிறகு நிரந்தரப்படுத்தி கொள்கிறார்கள்.
ஆனால் இந்த சட்டத்தில் தொழிற்சாலைக்குள் வேலைக்காக சேர்க்கப்பட்டவர்கள்; தற்காலிக தொழிலாளர்களோ, பதிலியோ, தொழில் பழகுநரோ, ஒப்பந்த தொழிலாளரோ யாராகயிருந்தாலும் அவர்களுக்கு 'சேர்க்கை ஆணை மடல்' வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
3. சம வேலைக்கு சம ஊதியம்
'ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்' என்று கூறுகிறது.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான்.
4. இரவுப் பணியில் பெண்கள்
இரவு நேரத்திலும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறது இந்த சட்டம்.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான்.
முதலில் சில துறைகளுக்கு மட்டும் இரவு பணியில் பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிறகு 10 பேர் சேர்ந்து ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தால் பாதுகாப்புடன்; அதாவது வீடு வரை பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வண்டி ஏற்பாடு செய்து தர வேண்டுமென இருந்து வருகிறது.
இது தீர்ப்பின் மூலம் நடைமுறையில் இருந்து வந்தது.
அதை சட்டமாகவே மாற்றியிருக்கிறார்கள்.
5. பணிக்கொடை
அய்ந்து ஆண்டுகள் பணி முடித்தால்தான் பணிக்கொடை கிடைக்கும் என சட்டம் இருந்தது. அதை ஓராண்டாக மாற்றி உள்ளனர்.
6. பொது மருத்துவ பரிசோதனை
40 தொழிலாளர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
7.PF, ESI, காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு சலுகை
இவை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் தான்.
முதல் நாளிலிருந்தே வழங்கப்பட வேண்டும் என்று தற்போது கூறுகிறது.
சட்டவிரோதமாக பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இச் சலுகைகளை வழங்காமல் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
8. இரட்டிப்பு ஊதியம்
அனுமதி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் மணி நேரங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வழிவகை செய்கிறது.
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டம் தான்.
9. அபாயகரமான துறைகளில் நூறு விழுக்காடு பாதுகாப்பு. இதுவும் ஏற்கனவே உள்ளது தான்.
10. 500 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.
11. பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு
பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்; அதில் பெண் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்.
இது ஏற்கனவே தீர்ப்பின் மூலம் 2013ஆம் ஆண்டுசட்டம் நடைமுறையில் உள்ளது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
12. தொழிற் சங்கங்கள் தொடங்க வேண்டுமானால் தொழில்
நிறுவனத்தின் அனுமதி வேண்டும்.
இது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும்.
13. தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு
100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற முறை மாற்றப்பட்டு 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.
14. குறைதீர் குழு (Grievance Redressal Committee): 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயமாகப் பணியாளர் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும்.
100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைக் குழு (Works Committee) சட்டப்படி அமைக்கப்பட வேண்டும் என்று இருந்தது.
இதைத்தான் 'குறைதீர் குழு' என்ற பெயரில் மாற்றி அமைத்துள்ளது.
தொழிற் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை(தொழிற்சங்கங்கள் சட்டம் மற்றும் தொழிற் தகராறு சட்டம்), தொழிலாளர்களை மிகுதியாக பாதிக்கும் வகையில் திருத்தியுள்ளனர் என்பது தான் அனைவருடைய கவலையும் ஆகும்.
ஆகையினால் தான் தொழிலாளர்கள் இச் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
முக்கிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த நூல்கள் வருமாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக