திங்கள், 12 ஜனவரி, 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!

 சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (டிஏபிஎஸ்) என்ற புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை, தமிழ்நாடு நிதித் துறைச் செயலர் த. உதயசந்திரன் நேற்று முன்தினம் (10.1.2026) வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாணையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், ஜன.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த அரசாணையின்படி, ஓய்வூதியா்களின் கடைசி மாத ஊதியத்திலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியம், ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்றும், ஒன்றாம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான புதிய திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டம் ஜன. 1ஆம் தேதிக்கு முன்பு காலாவதியாகிவிட்டது. ஏற்கெனவே முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், 10.1.2026 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தாா். இந்த குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு பலன்களைத் தொடா்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு 50 சதவீதத்துக்கு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளா்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்துக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால், அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும்போதும், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் இதற்குப் பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சோ்ந்து, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னா் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவா்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஜன. 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 12.01.25

வெள்ளி, 9 ஜனவரி, 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 


தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான 

சென்னை, ஜன.3 தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (3.1.2026) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் அக்கறை காட்டும் ‘திராவிட மாடல்’ அரசு!

ஆட்சி என்கிற வாகனத்தின் சக்கரங்களாக இருக்கக்கூடி யவர்கள் அரசு அலுவலர்கள். அந்தச் சக்கரங்கள், மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை கடைகோடி மனிதர் வரை கொண்டு சேர்க்கப் பயணிக்கின்றன. அதை உணர்ந்துள்ள அரசுதான் முத்தமிழறிஞர் கலைஞர் வழிவந்த ‘திராவிட மாடல்’ அரசு. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் கலைஞர் வழியில் எப்போதும் அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் மகத்தான பணியை மேற்கொண்டு, அரசின் கரங்களாக விளங்கக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

தொடர்ந்து குறைக்கப்படும் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு, திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி குறைக்கப்படுவது அல்லது முறையாக விடுவிக்கப்படாமல் இருப்பது, தமிழ்நாடு முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியை எட்டியி ருப்பினும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. மாற்றங்களால் குறைந்து வரும் மாநிலத்தின் வரி வருவாய், உயர்ந்து வரும் நலத்திட்டச் செலவுகள் போன்றவற்றால் ஏற்படும் நிதிச்சுமைகளையும் தாண்டி,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைத் தொடர்ந்து காத்து வருகிறார்.

அந்தவகையில்,

கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 2022ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசிற்கு இணையாக உயர்த்தி வழங்கியதோடு, ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமத மின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 01.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள், விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால், ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாயும், ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.  பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ரூபாய் அய்ந்து இலட்சம் முதல் ரூபாய் 10 இலட்சம் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில ரூபாய் 10 இலட்சம் வரை நிதி யுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு இலட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து  ரூபாய் 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம்  10 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வு பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியப் பணிக்கொடை ரூபாய் 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்க ளுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் அய்நூறிலிருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்க ளாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் தொடர் கோரிக்கை!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய்ச் செலவில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த இருபது ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

தகுந்த பரிந்துரைகளை வழங்கிட குழு அமைத்தது!

அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தி னரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்புடையது என்பதை உணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இக்கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்றுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனையின் போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்கள், நிதித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக் கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்விதத் தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

கூடுதல் நிதி முழுவதையும்
தமிழ்நாடு அரசே ஏற்கும்!

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக
13 ஆயிரம் கோடி ரூபாய்!

மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.  இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றம்!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும், நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும்,  பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை,  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

- விடுதலை நாளேடு,3.1.26

வியாழன், 8 ஜனவரி, 2026

1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

 


சென்னை, டிச.26- 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

செவிலியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவம் –- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் முதலமைச்சர் அறிவுறுத்தல்களின்படி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யும்பொருட்டு, நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தர பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்தகால ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு பணிநியமனம் பெற்ற 6,395 ஒப்பந்த செவிலியர்களில், 1,871 செவிலியர்கள் மட்டுமே 2020-ஆம் ஆண்டு வரை பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தி.மு.க. ஆட்சி பதவியேற்ற 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ½ வருடங்களில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு (2024) மட்டும் மொத்தம் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊதியத்துடன் கூடிய
மகப்பேறு விடுப்பு

தற்போது, செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. ஆயினும் மகளிர் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு ஒன்றிய அரசின் மகப்பேறு சட்டம், 1961-இன் படி ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தேசிய நலவாழ்வுக் குழும் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.

கோவிட் செவிலியர்களுக்கு பணி ஆணை

கரோனா காலத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 செவிலியர்களில் பணியில் சேராத  390 பேர் நீங்கலாக, 2146 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு, தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.  மீதமுள்ள 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்றவுடன், ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக மே-2021 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூதிய உயர்வு ஒருசில ஒப்பந்த செவிலியர்களுக்கு சில நிர்வாக காரணங்களால் பெற இயலாமல் உள்ளனர் என அறிய வருகிறது.  அவர்களுக்கு விரைவில் இவ்வூதிய உயர்வுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைளின் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசின் முதற்கட்டமாக 1000 நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் முடிவினை ஏற்று, தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

- விடுதலை நாளேடு,26.12.25

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களது குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50000 குறித்து புதிய அரசாணை

 சென்னை, டிச. 28– அரசு ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்கள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒரு முக்கியமான அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund – FSF) வழங்கும் அதிகாரத்தை ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓய்வூதியதாரர்கள் குடும்பங்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளது.

குடும்ப பாதுகாப்பு நிதி
என்றால் என்ன?

பொதுவாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund) என்ற திட்டத்தை செயலபடுத்தி வருகிறது. அதா வது ஓய்வூதியதாரர்கள் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத் துக்கு உடனடியாக நிதி உதவியா ரூபாய் 50,000 வழங்கப்படும். இதற்காக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் மாதம் ரூ.150 பங்களிப்பாக ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

குடும்ப பாதுகாப்பு நிதி பழையமுறை

இதில் சிக்கல் என்னவென்றால், ஒருவேளை ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய தாரர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ், இந்த பணம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநர், அந்த விண்ணப்பத்தை சென்னையில் இருக்கும் ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை

இதற்கு கால தாமதம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என தொடர்ந்து புகார்கள் ஓய்வூதியதாரர் குடும்பத்திடம் இருந்து  வந்தது. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், உடனடியாக அவர்களின் குடும்பத்துக்கு குடும்ப பாதுகாப்பு நிதி கிடைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை

இதைக்கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிய அரசாணை G.O. 267 படி, இனி அலைச்சல் இருக்காது மற்றும் தாமதம் இருக்காது. ஓய்வூதியர் குடும்பத்துக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைக்கும்.

குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் அதிகாரம்

அதாவது அரசாணையில், ‘இனிமேல் குடும்ப பாதுகாப்பு நிதி கோரிக்கைகள்’ அனைத்தும் சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும்  சென்னை ஓய்வூதியப் பட்டுவாடா அதிகாரி (PPO), மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் துணைக் கருவூல அதிகாரிகளுக்கே இத் தொகையை வழங்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாநில ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடைமுறை?

அதேநேரம் மாநிலத்திற்கு வெளியே ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் தொடர்பான குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்குவதற்கான தற்போதைய நடைமுறை, சென்னை கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநர் அலுவலகத்தில் தொடர்ந்து பின் பற்றப்படும் என கூறப்பட்டு உள்ளது.

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு ஓய்வூ தியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதி யதாரர்கள் மற்றும் அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்குவதற்காக 01.01.1997 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் பங்களிப்பு எவ்வளவு?

முன்னதாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.20/- பங்களிப்பாக ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 01.07.2021 முதல் மாதம் பிடித்தம் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது.

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவி எவ்வளவு?

மாதந்தோறும் பிடித்தம் ரூ.20, ஒரு ஆண்டு பங்களித்த பிறகு ஓய்வூதியதாரர் இறந்தால் ரூ.25,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. அதுவே  குடும்பப் பாதுகாப்பு நிதித் தொகை காலப்போக்கில் உயர்த்தப்பட்டு, ரூ.25,000/-லிருந்து ரூ.35,000/- ஆகவும், ரூ.35,000/-லிருந்து தற்போது ரூ.50,000/- ஆகவும் வழங்கப்படுகிறது.இத்தொகையைப் பெற, ஓய்வூதியதாரர் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இத்திட்டத்திற்குப் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதி
யாருக்கு வழங்கப்படும்?

ஓய்வூதியதாரரின் வாழ்க் கைத் துணைக்கு (மனைவி/கணவர்) முன்னுரிமை வழங்கப்படும். வாழ்க்கைத் துணை உயிருடன் இல்லாத பட்சத்தில், ஓய்வூதியதாரரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (Nominee) வழங்கப்படும். ஒருவேளை நாமினி பரிந்துரை செய்யப்படவில்லை எனில், அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

-விடுதலை நாளேடு,28.12.25

- விடுதலை

வியாழன், 18 டிசம்பர், 2025

தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்” 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடல்

அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும்  10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன!

தொழில் நிறுவனங்கள் மூடல்!

பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறது. தற்போது மோடிக்கு நெருக்கமான பூபேந்திர படேல் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், குஜராத் பாஜக அரசின் மோசமான தொழிற் கொள்கையில் உள்ள தெளிவற்ற நிலைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனை குஜராத் சட்டமன்றத்தில் அம்மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், “கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) குஜராத்தில் மொத்தமாக 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

2018-2019 இல் 2,752 நிறுவனங்களும், 2019-2020இல் 2,873 நிறுவனங்களும்,  2020-2021இல் 2,367 நிறுவனங்களும், 2021-2022 இல் 1,749 நிறுவனங்களும்,  2022-2023இல் 1,209 நிறுவனங்கள் என மொத்தம் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் தொழிற் கொள்கையின் விளைவு 5 ஆண்டு களில் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது சாதாரண விஷயம் அல்ல. தொழில் நிறுவனங்கள் மூடலுக்கு முக்கியக் காரணங்களாக, கடன் சுமை அதிகரிப்பு மற்றும் அதைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஆகியவையே கூறப்படுகின்றன.

தொழிலாளர்கள் வேலையிழப்பு!

தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பெருமளவு மூலதனமும் முடங்கியுள்ளது. குஜராத் பாஜக அரசாங்கம் நன்கொடைக்காக கார்ப்பரேட் தொழில்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தான் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பின்னடைவுக்குக் காரணம்.

அதே போல சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தியதன் தாக்கம், போதிய அரசு ஆதரவின்மை, சந்தைப் போட்டி மற்றும் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை சிறு தொழில்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசு மழுப்பல் தொழில் துறைக்கு உதவுவதற்காகப் பல்வேறு கடன் மானியத் திட்டங்கள் மற்றும் மூலதன ஊக்க உதவிகள் வழங்கப்பட்டதாக குஜராத் பாஜக அரசு கூறினாலும், இந்த நிறுவனங்கள் மூடப்பட்டதற்குக் குறிப்பிட்ட கார ணங்களை அரசுத் தரப்பு தெளிவாக விளக்கவில்லை. எனி னும் தொழிற்கொள்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டி யதன் அவசியத்தை இப்புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

-விடுதலை நாளேடு,12.12.25

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!

 


அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல்

திருச்சி, டிச,14– திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய பொதுத்துறை நிறு வனமான பெல் நிறு வனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் முதன்மை வாயில் (மெயின் கேட்டு) முன்பு வாயிற் கூட்டம் நேற்று (13.12.2026) நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகே  ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம்  உள்ளது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர் இதில் பல தொழிலாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். சில தொழிலாளர்கள் இறந்து விட்டனர். “

இந்நிலையில் தற்பொழுது சுமார் 500  தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நீண்ட நாள்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக திராவிடர் தொழிலாளர் கழகம் உள்ளிட்ட பல சங்கங்கள்  போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் பெல் நிறுவனம் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்தது.

அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த டிச. 5 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நான்கு மாதத்தில் பெல் நிர்வாகம் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை உடனடியாக அமல்படுத்த கோரி நேற்று (டிச.13) காலை 7.30 மணியளவில் பெல் நிறுவனத்தின் முதன்மை வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் வாயிற் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.முத்துக்குமார் தலைமை வகித்தார்.பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளரும் திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளருமான  மு.சேகர் முன்னிலை வைத்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.தீபன் சிறப்புரை ஆற்றினார்.   கூட்டத்தில் பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வராஜ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் உத்திராபதி, அம்பேத்கர் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கணபதி, டெமாக்ரடிக் டிரேட் யூனியன் பொதுச் செயலாளர் லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் இ.இராமர், சி.அய்டியு பொதுச் செயலாளர் இரா. பரமசிவன், பிஎம்எஸ் பொதுச் செயலாளர் ஜெயராமன், அய்என்டியுசி பொதுச் செயலாளர் அலெக்ஸ், அண்ணா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வில்லியம் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு பெல் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்கள். நிறைவாக  சிஅய்டியு சங்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சிறப்புத்தலைவர் ம.ஆறுமுகம், காட்டூர் கிளைக்கழகத் தலைவர் அ.காமராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்களும் பெல் தொழிலாளர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களும் பெல் ஒப்பந்த ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

-விடுதலை நாளேடு,14.12.25

செவ்வாய், 9 டிசம்பர், 2025

திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி! திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சட்டப் போராட்டம் வென்றது!

 

‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க
உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!

திருச்சி, டிச.6 திராவிடர் தொழிலாளர் கழ கத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பான ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் தொடுத்த வழக்கில் வர லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக, திருச்சி பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்‌இஎல்) நிறுவனத்தில்  நீண்ட காலமாகப் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடார் நேற்று (5.12.2025) வழங்கிய உத்தரவில், ஒன்றிய அரசின் தொழில் தீர்ப்பாயத்தின் 01.12.2022  தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக ‘பெல்’ வளாக ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் இந்த வழக்கை 2012 ஆம் ஆண்டில் தாக்கல் செய்தது. தொழிலாளர்களே இயக்கும் கூட்டுறவு அமைப்பாகப் பார்வைக்குத் தோன்றினாலும், அது உண்மையில் ‘பெல்’ நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் போலியான அமைப்பு (Sham, Bogus & Camouflage arrangement) என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

40 ஆண்டு காலப் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (‘பெல்’) தொழிற்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றியோரை நிரந்தரமாக்க வேண்டும்; நிரந்தரத் தொழி லாளர்களுக்குரிய பயன்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணை யாக அனைத்துப் பணிகளையும் செய்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தைத் தான் ‘பெல்’ நிர்வாகம் வழங்கி வந்ததே தவிர, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தையோ, பிற பலன்களையோ வழங்கவில்லை.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முயற்சி

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்த ரமாக்கக் கோரி, திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இப் பிரச்சினை குறித்துப் பலமுறை அறிக்கைகள் விடுத்ததுடன், ‘பெல்’ நிர்வாகத்தைக் கண்டித்துப் பல கூட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குகொண்டு உரையாற்றி உள்ளார்கள். தமிழர் தலைவர் கி.வீரமணி, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் திராவிடர் தொழிலாளர் கழகம் நடத்தியுள்ளது.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பல்வேறு தொடர் போராட்டங்களின் வாயி லாக, கேண்டின் உணவு அருந்துவதற்கான சலுகை, தேநீர், பாலிஸ்டர் சீருடை, தேசிய விடுமுறைகள், அவை  தவிர 18 நாட்கள் தற்செயல் விடுப்பு, புத்தாண்டுப் பரிசுகள், சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட்டன. ‘பெல்’ நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரக் காரணமான பெருந்தலைவர் காமராசர் படத்தை, அந் நிறுவனத்திற்குள்ளேயே வைக்க மறுத்த நிர்வாகத்தைக் கண்டித்து, தி.தொ.க. நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தான் இன்று காமராசர் படம் இந் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தனை வெற்றிகளைப் பெற்றிருந்தா லும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தர மாக்குவதற்கு, ‘பெல்’ நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,   திராவிடர் தொழிலாளர் கழகத்துடன் இணைக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு.சேகர், 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப்  பிறகும்?

தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு ‘பெல்’ நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், அப்போதும் ‘பெல்’ நிர்வாகம் அது குறித்துப் பரிசீலிக்கவில்லை.

அதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள ஒன்றியத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக உதவி தொழிலாளர் ஆணையரிடம் முறையிடக் கூறியதால், அங்கு சென்று சங்கம் முறையிட்டது. அங்கு ‘பெல்’ நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆணையிடப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், இவ்வழக்கை இந்தியத் தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைத்தார். அங்கிருந்து தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் நீதிபதி பிரசன்ன குமாரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கினார். அதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தடையாணை பெற்றது ‘பெல்’ நிர்வாகம். மீண்டும் சென்னை  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் என பல மேல்முறையீடுகள், வழக்குகளுக்குப் பிறகு, 2022  டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து, 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம்.

அந்த வழக்கில் தான் நேற்று (5.12.2025) இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலியான மற்றும் மறைமுக
வேலைவாய்ப்பு அமைப்பு

அந்தக் கூட்டுறவு அமைப்பு உண்மையான ஒப்பந்த நிறுவனமல்ல; நிரந்தரப் பணியாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்ட ‘‘நிழல்’’ அமைப்பு (Sham, & Bogus) என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம், பணிநேரம், கூடுதல் பணிநேரம், விடுப்பு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்தையும்  ‘பெல்’ நிறுவனமே நிர்வகித்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. ‘பெல்’ வழங்கிய அடையாள அட்டைகள், பணி நேர அட்டவணைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றுகள் அதனை உறுதியானதாக நிரூபித்துள்ளன. ‘பெல்’ நிர்வாகத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் தான்  இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், நிரந்தர பணித் தன்மையுள்ள வேலைகளான ஓட்டுநர், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற நிரந்தரப் பணிகளில் இத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குச் சம்பளம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஹுசைன் பாய் எதிர் அலாத் தொழிற்சாலை (1978) மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி இந்தியா (2001) போன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, “பணியைக் கட்டுப்படுத்துபவரே உண்மையான முதலாளி” என்ற கொள்கையை நீதி மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மறைமுகமாகவும், போலியாகவும் இப் பணிகளை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டு, அந்தப் பணியாளர்களுக்கான பயன்களை வழங்கா மல், நிரந்தரப் பணியாளர்களாகவும் அங்கீ கரிக்காமல் இருந்த ‘பெல்’ நிர்வாகத்தின் செயல் தவறானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வழக்கில் இருந்த இரண்டாவது பிரதிவாதியான கூட்டுறவு அமைப்பு முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

இத் தீர்ப்பின் படி, தகராறு எழுந்த தேதியன்று பணியில் இருந்த தொழிலாளர்கள் அைனவரும் நிரந்தரமாக்கப்படவேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் அவர்களின் பணிக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தகராறு தொடங்கிய தேதிமுதல் சம்பள வேறுபாடு (arrears) வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை ‘பெல்’ நிறுவனம் 4 மாதங்களுக்குள் அமலாக்க வேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, பொதுத்துறை நிறுவ னங்களில் நிரந்தர ஆட்சேர்ப்பை தவிர்த்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை நீண்டகாலம் பயன்படுத்தும் முறைகளுக்கு வலுவான சட்டப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற நிழல் ஒப்பந்தங்கள் போடும் நடைமுறைகளுக்கு எதிரான பிற வழக்குகளுக்கும் இது முன்னுதாரணமாக அமையும் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாதாடிய வழக்குரைஞர்களுக்கும்– ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கும் நன்றி!

இவ்வழக்கில் பல்வேறு நிலைகளிலும் ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர்கள் இரா.விடுதலை, ஏ.தியாகராஜன், வழக்கு ரைஞர்கள் த.வீரசேகரன், கே.வீரமணி, கே.பாலசுப்பிரமணியன், ஆர்.அண்ணாமலை, எஸ்.நாகநாதன், ஜெ.துரைசாமி, வி.பிரபாகரன், டி.பிரதீப்ராஜா, எம்.நடராசன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் மிகச் சிறப்பாக வாதாடினர். தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இப் போராட்டத்திற்குப் பல்வேறு நிலைகளிலும் ஆதரவாக இருந்துள்ளனர்.

வழக்கின் வெற்றியைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் திருச்சியில் இன்று (6.12.2025) தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பொருளாளரும், காட்டூர் பகுதி திராவிடர் கழகத் தலைவருமான காமராஜ் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

திராவிடர் தொழிலாளர் கழகம் தொடுத்த சட்டப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, திருவெறும்பூரில் இந்தத் தீர்ப்பை விளக்கி விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறும் என்று திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு,6.12.25