செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன வாழ்வியலில் தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊழியர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்த வாரத்தில் 2 நாட்கள் ஓய்வு என்பது அத்தியாவசியமானது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் சேவை தேவைப்படும் அரசு மற்றும் தனியார் துறைகளில், பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் ஊழியர்களைச் சுழற்சி முறையில் (Rotational basis) பணியமர்த்தி இந்த 2 நாட்கள் விடுமுறையைச் செயல்படுத்தலாம் என்றும் மனுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கட்டாய விடுமுறையாக உள்ள நிலையில், இந்த வழக்கு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

-விடுதலை நாளேடு, 11.8.26

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தும் கருத்தரங்கம்

 ஓசூர், ஆக. 10- ஓசூரில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கக் கோரி கருத்தரங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பு.ஜ.தொ.மு மாவட்ட செயலாளர் இரா.சங்கர் தலைமையில் ஒசூர் ஆந்திரா சமிதியில் நடைபெற்றது.

திராவிடர் கழக தொழிலாளர் அணி சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கருத்தரங்கில் தமிழக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் சந்தோஷ்,ஒசூர் வழக்குரைஞர் சங்கம் இணைச்செயலாளர் வழக்குரைஞர் எம்.வெங்கடேஷ், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் பொதுச்செயலாளர் ஜே.ஆதிரூபன், ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுந்தரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் இரவிச்சந்திரன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம் தலைமை குழு உறுப்பினர் க.இரா.தமிழரசன், பு.ஜ.தொ.மு.இ.கோ. வெங்கடேசன், புரட்சிகர மக்கள் அதிகாரம் வழக்குரைஞர் முரளி, ஜெயராமன், ஆகியோர் கருத்துரைக்கு பின் பெங்களூரு உயர்நீதிமன்றம் மாநில அய்.எப்.டி.யூ. தலைவர் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இடையே விடியல் காலை குழுவின் பறையிசை, புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், மாநகர தலைவர் து.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர் முடிவில் பு.ஜ.தொ.மு.இணைச் செயலாளர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

-விடுதலை நாளேடு, 10.08.2026

விபி ஜி ராம் ஜி திட்டம் அறிமுகமான முதல் மாதத்திலேயே சரிவைச் சந்தித்த வேலைவாய்ப்பு!

 

புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி  திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, ஊரகப் பகுதிகளுக்கான வேலைநாட்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 15.33 கோடி வேலைநாட்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், நடப்பு 2026 ஜூலை மாதத்தில் விபி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வேலைநாட்களின் எண்ணிக்கை 7.67 கோடியாகச் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் ஜூலை மாத ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் வேலைநாட்களின் எண்ணிக்கை 49.94 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே பணிநாட்கள் இந்த அளவுக்குக் குறைந்துள்ளது ஊரகப் பகுதி தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


- விடுதலை நாளேடு, 10.08.2026

சனி, 18 ஜூலை, 2026

பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் - ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை அரசு ஆணை

 01.04.2025 முதல் நடைமுறைக்கு வரும் பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் வழங்கக் கூறும் ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை அரசு ஆணை



செவ்வாய், 7 ஜூலை, 2026

உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!



 புதுடில்லி, ஜூலை 4- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்காக வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய மற்றும் சேமிப்புத் திட்டம் ஆகும்.

கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 31.83 லட்சம் பிஎப் கணக்குகளில் ரூ.10,181 கோடி உரிமை கோரப்படாமல் இருந்தது. ஒன்றிய அரசு தற்போது ‘‘உங்கள் பணம், உங்கள் உரிமை’’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்படி உரிமை கோரப்படாத பிஎப். தொகை, வங்கி கணக்கு டெபாசிட், காப்பீட்டு தொகை, ஈவுத் தொகை, பிற நிதி சொத்துகள் உரியவர்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த ஓராண்டில் பல்வேறு பிஎப் கணக்குகளில் முடங்கி இருந்த ரூ.851 கோடி உரியவர்களிடம் அளிக்கப்பட்டது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎப் கணக்குகளில் ரூ.9,330 கோடி முடங்கியுள்ளது.

இந்த தொகையை உரியவர்களிடம் திருப்பி அளிக்க அதிதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஎப் கணக்குகளில் முடங்கியிருக்கும் ரூ.9,330 கோடி நிதி மூலம் 3 அய்அய்டி கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை நாளேடு, 4.7.26

புதன், 11 பிப்ரவரி, 2026

நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் ஒரு பார்வை

 சமூக ஊடக செயற்பாட்டாளர் குழு(SMAG), வழக்குரைஞர் பு. பாலகோபால் அறக்கட்டளை  இணைந்து நடத்திய

நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 07.02.2026ஆம் நாள் நடைபெற்றது.

வழக்குரைஞர் தளபதி பாண்டியன்  (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு ) வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) அவர்கள் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை)  தொடக்க உரையாற்றினார். திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) தலைமையில் இந் நகழ்ச்சி நடைபெற்றது. : தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர். கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) நன்றி உரையாற்றினார்.

கருத்தரங்கில் முழுமையாக பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து 29 சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்பு சட்டங்களாக ஒன்றிய அரசு 21.11.2025 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. 

1. ஊதிய சட்டம் - 2019 
2. தொழில் உறவு சட்டங்கள் -2020
3. சமூக பாதுகாப்பு சட்டம் - 2020
4. பணியிட பாதுகாப்பு சட்டம் மற்றும் பணிச் சூழல் சட்டம் - 2020

இட் சட்டங்கள் குறித்த நன்மை தீமைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. 

புதிய நான்கு சட்டங்களில் உள்ள சில பகுதிகளை பற்றி பார்ப்போம்: 

1. ஊதியம் 
'அனைத்து தொழிலாளர்களுக்கும் 'குறைந்தபட்ச ஊதியம்'  உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று கூறுகிறது. 
1(அ) அடிப்படை ஊதியம் 
'மொத்த சம்பளத் தொகையில் அடிப்படை ஊதியம் 50 விழுக்காடு இருக்க வேண்டும்'. 
இது தீர்ப்புகளில் சொல்லப்பட்டது தான். அதை சட்டமாக மாற்றி உள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியம் நடைமுறையில் உள்ளது. 
தொழிற்சாலை பணியாளர்களுக்கு மட்டும்தான் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. சேர்க்கை ஆணை மடல் 
தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்போது 'பணி நியமன ஆணை'வழங்கப்பட வேண்டும்' என்று சொல்கிறது. 
பொதுவாக தொழிற்சாலைகளில் முதலில் தற்காலிக தொழிலாளர்களாக சேர்ந்து கொள்கின்றனர். பிறகு தனக்கு ஏற்புடையவராக இருந்தால் தொழில் பழகுநர் கடிதம் கொடுத்து; பிறகு நிரந்தரப்படுத்தி கொள்கிறார்கள். 
ஆனால் இந்த சட்டத்தில் தொழிற்சாலைக்குள் வேலைக்காக சேர்க்கப்பட்டவர்கள்; தற்காலிக தொழிலாளர்களோ, பதிலியோ, தொழில் பழகுநரோ, ஒப்பந்த தொழிலாளரோ யாராகயிருந்தாலும் அவர்களுக்கு 'சேர்க்கை ஆணை மடல்' வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

3. சம வேலைக்கு சம ஊதியம் 
'ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்' என்று கூறுகிறது. 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 

4. இரவுப் பணியில் பெண்கள்
இரவு நேரத்திலும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறது இந்த சட்டம். 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 
முதலில் சில துறைகளுக்கு மட்டும் இரவு பணியில் பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிறகு 10 பேர் சேர்ந்து ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தால் பாதுகாப்புடன்; அதாவது வீடு வரை பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வண்டி ஏற்பாடு செய்து தர வேண்டுமென இருந்து வருகிறது. 
இது தீர்ப்பின் மூலம் நடைமுறையில் இருந்து வந்தது. 
அதை சட்டமாகவே மாற்றியிருக்கிறார்கள். 

5. பணிக்கொடை 
அய்ந்து ஆண்டுகள் பணி முடித்தால்தான் பணிக்கொடை கிடைக்கும் என சட்டம் இருந்தது. அதை ஓராண்டாக மாற்றி உள்ளனர்.

6. பொது மருத்துவ பரிசோதனை
40 தொழிலாளர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

7.PF, ESI, காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு சலுகை 
இவை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் தான்.
முதல் நாளிலிருந்தே வழங்கப்பட  வேண்டும் என்று தற்போது கூறுகிறது.

சட்டவிரோதமாக பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இச் சலுகைகளை வழங்காமல் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

8. இரட்டிப்பு ஊதியம் 
அனுமதி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் மணி நேரங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வழிவகை செய்கிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டம் தான். 

9. அபாயகரமான துறைகளில் நூறு விழுக்காடு பாதுகாப்பு. இதுவும் ஏற்கனவே உள்ளது தான்.

10. 500 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். 

11. பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு 
பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்; அதில் பெண் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். 

இது ஏற்கனவே தீர்ப்பின் மூலம் 2013ஆம் ஆண்டுசட்டம் நடைமுறையில் உள்ளது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

12. தொழிற் சங்கங்கள் தொடங்க வேண்டுமானால் தொழில் 
நிறுவனத்தின் அனுமதி வேண்டும். 

இது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும்.

13. தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு 
100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற முறை மாற்றப்பட்டு 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.

14. குறைதீர் குழு (Grievance Redressal Committee): 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயமாகப் பணியாளர் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். 

100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைக் குழு (Works Committee) சட்டப்படி அமைக்கப்பட வேண்டும் என்று இருந்தது. 
இதைத்தான் 'குறைதீர் குழு' என்ற பெயரில் மாற்றி அமைத்துள்ளது.

தொழிற் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை(தொழிற்சங்கங்கள் சட்டம் மற்றும் தொழிற் தகராறு சட்டம்), தொழிலாளர்களை மிகுதியாக பாதிக்கும் வகையில் திருத்தியுள்ளனர் என்பது தான் அனைவருடைய கவலையும் ஆகும்.
ஆகையினால் தான் தொழிலாளர்கள் இச் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். 

முக்கிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த நூல்கள் வருமாறு
தமிழில் தொழிலாளர் சட்டங்கள் அடங்கிய நூல்
தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் சட்டம் (அரசு உரிமம் பெற்ற நூல்)
தொழிற்சாலைகள் சட்டம் (ஒன்றிய அரசே 1954 இல் வெளியிட்ட தமிழ் நூல்)
மாதிரி நிலையானைகள் சட்டம்

திங்கள், 12 ஜனவரி, 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!

 சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (டிஏபிஎஸ்) என்ற புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை, தமிழ்நாடு நிதித் துறைச் செயலர் த. உதயசந்திரன் நேற்று முன்தினம் (10.1.2026) வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாணையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், ஜன.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த அரசாணையின்படி, ஓய்வூதியா்களின் கடைசி மாத ஊதியத்திலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியம், ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்றும், ஒன்றாம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான புதிய திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டம் ஜன. 1ஆம் தேதிக்கு முன்பு காலாவதியாகிவிட்டது. ஏற்கெனவே முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், 10.1.2026 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தாா். இந்த குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு பலன்களைத் தொடா்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு 50 சதவீதத்துக்கு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளா்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்துக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால், அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும்போதும், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் இதற்குப் பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சோ்ந்து, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னா் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவா்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஜன. 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 12.01.25