திங்கள், 10 ஆகஸ்ட், 2026

ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தும் கருத்தரங்கம்

 ஓசூர், ஆக. 10- ஓசூரில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கக் கோரி கருத்தரங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பு.ஜ.தொ.மு மாவட்ட செயலாளர் இரா.சங்கர் தலைமையில் ஒசூர் ஆந்திரா சமிதியில் நடைபெற்றது.

திராவிடர் கழக தொழிலாளர் அணி சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கருத்தரங்கில் தமிழக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் சந்தோஷ்,ஒசூர் வழக்குரைஞர் சங்கம் இணைச்செயலாளர் வழக்குரைஞர் எம்.வெங்கடேஷ், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் பொதுச்செயலாளர் ஜே.ஆதிரூபன், ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுந்தரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் இரவிச்சந்திரன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம் தலைமை குழு உறுப்பினர் க.இரா.தமிழரசன், பு.ஜ.தொ.மு.இ.கோ. வெங்கடேசன், புரட்சிகர மக்கள் அதிகாரம் வழக்குரைஞர் முரளி, ஜெயராமன், ஆகியோர் கருத்துரைக்கு பின் பெங்களூரு உயர்நீதிமன்றம் மாநில அய்.எப்.டி.யூ. தலைவர் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இடையே விடியல் காலை குழுவின் பறையிசை, புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், மாநகர தலைவர் து.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர் முடிவில் பு.ஜ.தொ.மு.இணைச் செயலாளர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

-விடுதலை நாளேடு, 10.08.2026

விபி ஜி ராம் ஜி திட்டம் அறிமுகமான முதல் மாதத்திலேயே சரிவைச் சந்தித்த வேலைவாய்ப்பு!

 

புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி  திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, ஊரகப் பகுதிகளுக்கான வேலைநாட்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 15.33 கோடி வேலைநாட்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், நடப்பு 2026 ஜூலை மாதத்தில் விபி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வேலைநாட்களின் எண்ணிக்கை 7.67 கோடியாகச் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் ஜூலை மாத ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் வேலைநாட்களின் எண்ணிக்கை 49.94 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே பணிநாட்கள் இந்த அளவுக்குக் குறைந்துள்ளது ஊரகப் பகுதி தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


- விடுதலை நாளேடு, 10.08.2026