சனி, 15 ஆகஸ்ட், 2015

நெய்வேலி - தொழிலாளர்கள் போராட்டம் : மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காணட்டும்!



நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் வேலை நிறுத்தத்தை மக்கள் நலன், தொழிலாளர் நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர்,  பத்து அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி  21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு பணிபுரிந்து ஒப்பந்தப் பிரச்சினை 1994ஆம் ஆண்டில்  தொழில்கூட்டுறவு சேவை சங்கம் தொடங்கப் பட்டு  (Neyveli Lignite Corporation Industrial Co-operative Service Society) அதில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்து,  அதன் மூலம் இடைத் தரகர்களை (Contractors)  நீக்கி, அவர்களுக்கு கூட்டுறவு சங்கமே ஊதியம் வழங்கி வந்தது.
பின்னர் நிர்வாகத்தில் பணிகாலியாகும் பொழுதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்தி சுமார்  4000 தொழிலாளர்கள் தற்போது நிரந்தரத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 1994க்குப்பின், தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தவர்களை கூட்டுறவு சங்கத்திலே உறுப்பினர்களாக்க நிர்வாகம் தவறிவிட்டதால்,  மீண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர ஆரம்பித்தது.
இதனால் 2008ஆம் ஆண்டில் போராட்டம் நடைபெற்றது. அப்போதும் 13 ஆயிரம் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசு தலையிட்டு  16-6-2008 அன்று  தொழிற் சங்கமும், நிர்வாகமும், டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற் றப்பட்டது. அதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5000 பேர்களை கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்வது; ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெற்றுவந்த ஊதியத்தைவிட, மாதம் ரூ. 750/- உயர்வு தரவும் இசைவு தந்து ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன் பின்னர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்பந்தத் தொழி லாளர்களை பதிவு செய்வதில்  நிர்வாகம்  கால தாமதம்  செய்ததால், 2010ஆம் ஆண்டு  மீண்டும் ஒப்பந்தத் தொழி லாளர்கள்  வேலை நிறுத்தம் செய்தார்கள்.  26-10-2010 அன்று தலைமைச்செயலகத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள், தமிழக அரசு  பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊதிய உயர்வு  ரூ.1,040 என்பதை ரூ. 1,560 என்ற அளவிற்கு உயர்த்திட முடிவானது.
2012ஆம் ஆண்டில் என்எல்சி தொழிலாளர் பிரச்சினை குறித்த கவனஈர்ப்புத் தீர்மானத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு. கொண்டுவந்தார். கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.
2012ஆம் ஆண்டில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத் தலைமை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தபோதிலும்,  உடன்பாடு ஏற்படவில்லை.
தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய் வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க என்.எல்.சி. நிர்வாகம்  முயற் சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று  அப்போது கூறப் பட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த வேண்டிய புதிய மாற்று ஊதிய ஒப்பந்தத்தை, என்.எல்.சி. நிர்வாகம் இதுவரை அமல்படுத்தவில்லை.
இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். என்.எல்.சி.யின் நிகழும் நிதியாண்டில் காலாண்டு இலாபம் ரூ.512 கோடியாகும். தொழிலாளர்கள் 24 சதவீத ஊதிய மாற்றம், இரு ஊதிய உயர்வுகளை முக்கியமாகக் கோருகிறார்கள்.
இது குறித்து சென்னை, டில்லி ஆகிய இடங்களில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் இன்றும்  தொடர்கிறது.
முற்றுகை
மேலும், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கிற வகையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத் தினரின் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினரும், ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டமைப் பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதுதவிர நிரந்தர தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அனல்மின்நிலையம், சுரங்கம், என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகை யிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கைதாகி விடுதலை யானார்கள்.
சுதந்திர விழா புறக்கணிக்க முடிவு
இந்த நிலையில், நேற்று முன்தினம் என்.எல்.சி. அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், தொழிலாளர் களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்புகளை நிர்வாகத்திற்கு தெரிவிப்பது, வருகிற 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் யாரும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டது.
மின் உற்பத்தி குறைந்தது
என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, மின் உற்பத்தியானது தொடர்ந்து அதன் முழு அளவை எட்டாமல் இருந்து வருகிறது. 2,990 மெகாவாட் என்கிற மொத்த மின் உற்பத்தியில் 2,132 மெகாவாட் அளவில் உற்பத்தியானது. இதன் மூலமாக 858 மெகாவாட் குறைந்து காணப்பட்டது.
ஏற்கெனவே மின் தட்டுப்பாடு தலை விரித்தாடும் நிலை யில், இந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் யாருக்கோ வந்த  விருந்து என்று அலட்சியம் காட்டி வருவது ஏன்?
இதனால் ஏற்படும் நட்டம் குறித்து கணக்கிட்டுப் பார்க்க வேண்டாமா? தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தந்தால் என்ன குறைந்து விடும் - லாபத்தில் நடைபெறும் இந்த நிறுவனத்திற்கு?
மத்திய அரசு பிரச்சினை என்று மாநில அரசு ஒதுங்கிக் கொள்வது முறையல்ல; மின் உற்பத்தி குறைந்தால் நேரிடையாக பாதிப்பு தமிழ்நாட்டுக்கும்தான்.
முதல் அமைச்சர் நேரடியாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ள முன் வந்தால்  மத்திய அரசும் இறங்கி வரும். 12 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள் - தொடர்ந்து மூன்று வாரமாக என்கிறபோது, இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத் திருக்க வேண்டும்!
மத்திய - மாநில அரசுகள் உடனே தலையிட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறத்துகிறோம்.
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையோ? பூணத் தகுந்தது பொறுமையோ?     - புரட்சிக் கவிஞர்



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.8.2015 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக