திங்கள், 12 நவம்பர், 2018

அரசு ஓய்வூதியதாரர்கள் 70,000 பேர் கருவூலத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் திட்டத்துக்கு மாற்றம்

சென்னை, நவ.12  பொதுத்துறை வங்கித் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத்துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருவூலக்கணக்கு ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களின் சிலர் பொதுத்துறை வங்கி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அந்த ஓய்வூதியர்கள் இதனால் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களது நலன் காக்கும் பொருட்டும் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70,000 தமிழக அரசின் ஓய்வூதியர்கள் தமிழக அரசின் ஆணைப்படி இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத் துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்ட கருவூ லங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை அலுவலகங்களில் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் பொதுத்துறை வங்கித் திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்நாள் சான்றினை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர். தற்போது அந்த ஓய்வூதியர்கள் அனைத்து பதிவேடு களும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான  தங்களது வாழ்நாள் சான்றினை, தங்கள் ஓய்வூதியம் பராமரிக்கும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள் அல்லது சார் கருவூலங்களில் வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 12.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக