திங்கள், 8 ஜூன், 2015

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்
மதுரை, மே 23_ புதிய ஓய்வூதியத் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத் துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டேன். நோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குநராக 2012இல் பதவி உயர்வு பெற்றேன். இதன்பின், துறை அதிகாரிகளின் அனுமதியுடன் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தேன். அந்த பணி எனக்கு கிடைத்தது. ஆனால் என்னை விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் கிளையில் நான் தொடர்ந்த வழக்கில் என்னை விடுவிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 21.7.2014இல் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்தேன்.
ஆனால் எனது பணி புதிய ஓய்வூதியத் திட்டத் தின் கீழ் தான் வரும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 1.4.2003க்கு பிறகு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும். அதற்கு முன்னர் சேர்ந்து, தொடர்ச்சியாக பணி யாற்றுவோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே பொருந்தும் என விதிகள் உள்ளன. இதன்படி எனக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும். நான் பணி தொடர்ச்சியாக அரசின் கீழ் தான் பணியாற்றியுள்ளேன். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், துறை அதி காரிகளின் முன் அனுமதி பெற்றே விண்ணப்பித் துள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகே பணியில் இருந்து மனுதாரர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகே துறை ரீதியாக வேறு பணியில் சேர்ந்துள்ளார். இதை பணி இழப்பு காலமாக கருத முடியாது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பணி தொடர்ச்சி உள்ளதாக கருதி பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

-விடுதலை,23.5.15பக்-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக