ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

அரசு ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு! அரசாணை வெளியீடு

 சென்னை, செப். 4- தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் நிலையில், முழு ஊதியத்துடன் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2026-2027ஆம் ஆண்டுக்கான மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையின்போது, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 3ஆவது குழந்தைக்கான 12 வார மகப்பேறு விடுப்பு 365 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையை பெறலாம். இந்த 365 நாட்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்படும்.

மேலும், மகப்பேறு விடுப்பை மகப்பேறுக்கு முந்தைய ஓய்வு காலம் முதல் மகப்பேறுக்குப் பிந்தைய உடல்நல மீட்பு காலம் வரை, சம்பந்தப்பட்ட பெண் ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு முன்பே 3ஆவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பில் சென்று, அந்த விடுப்பை தொடர்ந்து அனுபவித்து வரும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த புதிய சலுகை பொருந்தும். அவர்கள் மொத்தமாக 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 4.9.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக