ஞாயிறு, 21 ஜூலை, 2019

கரும்புத் தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வுத்தகவலைக்கொண்டு, பிபிசி தமிழ் இணையம் பணிபுரியும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத் துக்காட்டியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சமீபத்திய மாதங்களில் பணிக்கு செல் லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர் பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன.
இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷய மாகவே உள்ளது. மாதவிடாய் காலப் பெண் கள் அழுக்கானவர்களாகவே கருதப்படு கின்றனர். மேலும் சமுக மற்றும் சமய நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகின்றனர்.
சமீப வருடங்களில் இந்த நடைமுறைகள் நகர்ப்புற படித்த பெண்களால் சற்று தளர்த் தப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.
இருப்பினும் அந்த சமீபத்திய இரண்டு செய்திகள் மாதவிடாய் தொடர்பாக இந்தியாவில் நிலவும் பிரச்சினைக்குரிய சூழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
பெரும்பாலான பெண்கள், குறிப்பாக கல்வி கற்காத ஏழை குடும்பத்து பெண்கள் தங்களின் உடல்நலத்திலும், வாழ்க்கை முறைகளிலும் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
முதலாவது, இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என இந்திய ஊடகங்களில் வந்த செய்தி.
அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வா றான அறுவை சிகிச்சைகளை செய்திருக் கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மகாராட்டிரா வின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி கரும்பு பயிரிடும் பகுதியான மேற்கு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக் கான குடும்பங்கள் வருகின்றன. அந்த கரும்புத் தோட்டங்களில் ஆறுமாத காலம் தங்கி அறுவடை வேலைகளை அவர்கள் செய்வதற்காக அங்கு வருகின்றனர்.
அவர்கள் அங்கு பணிக்கு வந்ததும், பேராசை மிக்க ஒப்பந்தக்காரர்கள் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் அவர்களிடமிருந்து அதிகப்படியான வேலைகளை வாங்கிக் கொள்கின்றனர்.
முதலில் இவர்கள் பெண்களை பணிக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென் றால் கரும்பு வெட்டுதல் ஒரு கடினமான பணி. மேலும் மாதவிடாய் காரணங்களால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் பணிக்கு வரமுடியாமல் போகலாம் என்பதும் அவர்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம். அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
பணியிடங்களில் தங்கும் நிலை மிக மோசமான ஒன்று. கரும்புத் தோட்டங் களுக்கு அருகாமையில் கூடாரங்களிலோ அல்லது சிறிய குடிசைகளிலோ அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது. அங்கு கழிப் பறைகள் இருக்காது. கரும்பு அறுவடை சில நேரங்களில் இரவு நேரங்களில் கூட நடை பெறும். எனவே தூங்குவதற்கோ அல்லது தூக்கத்திலிருந்து எழுவதற்கோ குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அது மிகவும் கடினமான ஒரு காலமாக அமைந்துவிடும்.
எனவே மோசமான சுகாதார சூழலால் அங்குள்ள பெண்கள் பல நோய் தொற்று களுக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் பணிபுரியும் ஆர்வலர்கள், `மனசாட்சியற்ற` சில மருத்துவர்கள், மருந்துகளில் குண மடையக்கூடிய வகையில் உள்ள சிறிய பிரச்சினைகளுக்குக் கூட கருப்பையை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணமா னவர்கள். அவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணமாகி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளன. எனவே கருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக விளக்காததால் அவர்கள் கருப் பையை எடுப்பது சரி என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் `கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக` உள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக கடந்த மாதம் மகாராட்டிர மாநில சட்டசபை உறுப் பினர் நீலம் கோர்ஹே கேள்வி எழுப்பிய போது, "மூன்று வருடங்களில் பீட் மாவட்டத் தில் மட்டும் 4,605 கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன." என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது அனைத்தும் கரும்புத் தோட் டங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நடத்தப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான பல வழக்குகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள வஞ்சர்வாடி கிராமத்திற்கு, என்னுடன் பணிபுரியும் பிபிசி மராத்தி சேவையை சேர்ந்த சக பத்திரிகையாளர், ப்ரஜக்தா துலப் பயணம் செய்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோ பரிலிருந்து மார்ச் மாதம் வரை 80 சதவீத கிராம மக்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அங்கிருந்து இடம் பெயர்வதாக அவர் தெரிவிக்கிறார்.
அந்த கிராமத்தில் உள்ள பாதி பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர் என்றும் அதில் பலர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், இன்னும் சிலர் தங்களின் இருபதுகளில்தான் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறார் ப்ரஜக்தா.
பல பெண்கள் அந்த அறுவை சிகிச் சைக்கு பிறகு தங்களின் உடல்நலம் மேலும் மோசமடைந்துவிட்டதாக தெரிவிக்கின்ற னர். அதில் ஒரு பெண் இந்த அறுவை சிகிச்சையால் தனக்கு தொடர்ந்து முதுகு வலி, கழுத்து வலி மற்றும் முட்டி வலி ஏற் படுவதாக தெரிவித்தார். மேலும் காலையில் எழுந்தவுடன் தனது கைகள், முகம் மற்றும் பாதங்கள் வீங்கிவிடுவதாக அவர் தெரி வித்தார். மற்றொரு பெண் தனக்கு தொடர்ந்து மயக்க நிலை ஏற்படுவதாகவும், சிறிய தொலைவில் கூட நடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறுகிறார். எனவே இதன் காரணமாக இருவரும் இனி கரும்புத் தோட்டங்களில் அவர்களால் பணி புரிய இயலாது.
தேசிய மகளிர் ஆணையம், மகாராட்டி ராவில் நிலவும் நிலையை "பரிதாபகரமான மற்றும் மோசமான" ஒன்று என தெரிவித்து உள்ளது.
மேலும் இம்மாதிரியான "கொடுமைகள்" எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
பாலினங்களுக்கு ஏற்ற கொள்கைகளை கொண்டு உலகம் முழுவதும் பணியிடங் களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தருணத்தில் இந்த செய்திகள் வெளியாகி யுள்ளன.
- கீதா பாண்டே,
பிபிசி தமிழ் இணையம், 8.7.2019
-  விடுதலை ஞாயிறு மலர், 13.7.19

மாதவிடாய் விடுப்பை பறிக்கும் வலி மாத்திரைகள்

திருப்பூர் தொழிலாளர்களின் வேதனைக் குரல்
அகிலா இளஞ்செழியன்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டே பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக இயற்கையான உடல் உபாதைகள், மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சமுகம் அவர்களை மனிதத் தன்மையுடன் அணுகாமல் வெறும் தொழிலாளியாக மட்டுமே அணுகுவதாக பணிபுரியும் பெண்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் பிபிசி தமிழ் இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் வருமாறு:
தமிழகத்தில் உள்ள சில ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அவர்களின் உடல்நலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலைகள் குறிப்பாக நூற்பாலைகள் அதிகம். வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் வந்து தங்கி பணிபுரிகின்றனர், அதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக வலி நிவாரண மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன.
மாதவிடாய் நாட்களில் விடுப்போ, ஓய்வோ எடுக்க வாய்ப்பு இல்லாததால், அந்த சமயங்களில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம், மில்லில் பணிபுரியும் பெண்களுக்கு பரவலாக இருக்கிறது. தகுதியான மருத்துவர்களின் அறிவுரையின்றி முறை யற்று வழங்கப்படும் இந்த மாத்திரைகளால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பல விதங்களில் பாதிக்கப்படுகிறது என தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் சில பெண்களிடம் பேசியது பிபிசி தமிழ். 26 வயதான ஜெனி, திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். நூற்பாலையில் பணிபுரிகிறார். இவர், எனக்கு பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி வரும். எனவே, மாதவிடாய் ஏற்பட்ட உடனேயே மில்லில் வழங்கப்படும் மாத்திரை களை வாங்கி சாப்பிட்டு விடுவேன். வெளியில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை வாங்கியும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், மில்லில் வழங்கப்படும் மாத்திரைகள் போல அவை உடனடியாக வலி நிவாரணம் அளிக்காது.
"எனவே, மில்லில் தரப்படும் மாத்திரைகளைத்தான் அதிகம் சாப்பிடுவேன். இப்பொழுதெல்லாம் எனக்கு மாதவிடாய் நேரத்தில் இரத்தப்போக்கு மிகவும் குறைந்து விட்டது, வழக்கமாக மூன்று நாட்கள் இருக்கும், இப்பொழுது ஒரு நாளில் நின்று விடுகிறது. எனவே, இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு , மருத்துவர் அறிவுரையின் படி சிகிக்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்" என்கிறார்.
"வயிற்றுவலிக்கு மில்லில் தரப்படும் மாத்திரைகள் மீது மேலுறை இருக்காது, அதனால் எங்களுக்கு பெயர் எல்லாம் தெரியாது. வேலைக்கு சென்ற பின்பு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் திரும்பி வீட்டிற்கு வர இயலாது. திரும்பினால், அன்றைய கூலி 300 ரூபாய் போய்விடும். ஓய்வு எடுக்கவும் வாய்ப்பில்லை. மெஷினை நிறுத்த முடியாது. அதனால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு வேலையினை தொடரத்தான் முயற்சி செய்வேன்" என்கிறார் கமலஜோதி.
"என்னுடன் வேலை பார்க்கும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு ஏற் படுவது போன்ற சிக்கல்கள் உள்ளன, இந்த மாத்திரைகளால் தான் இந்த பிரச்சினைகள் வருகின்றனவா என்று எங்களுக்கு தெரியாது. இதனால் இருக் குமோ என்று பயமாக இருக்கின்றது. அதனால் நான் இப்பொழுது மாத் திரைகள் எடுப்பதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டேன்.
இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் இரத்தப்போக்கு குறைந்து விடுகிறது. பொதுவாக 3, 4 நாட்கள் இருக்கும் ரத்தப்போக்கு இரண்டு நாட்களில் நின்று விடும். என்னுடன் வேலை செய்யும் திருமணமாகாத இளம் பெண்கள் இந்த மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்கின்றனர், பின் விளைவுகள் குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை, அப்போதைக்கு விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து விட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். வார விடுமுறை தவிர எல்லா நாள்களும் விடுப்பு எடுக்காமல் வந்தால் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்கும். ஊக்கத்தொகை, அன்றைய தினக்கூலி இரண்டையும் இழந்து விடக்கூடாது என்பதால் வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது" என்கிறார் அவர்.
இந்த சமயங்களில் ஓய்வு அளிப்பது போல் மாற்று ஏற்பாடுகள் கொண்டு வந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது குறையும் என்பது அவரது கருத்து.
வீட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்களை விடவும் விடுதியில் தங்கி இருப்பவர்கள் நிலை மோசம். அவர்கள் விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் இந்த சமயங்களில் கட்டாயமாக மாத்திரை களை எடுத்துக்கொள்கின்றனர். "இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்பொழுது சில நேரங்களில் நான்கைந்து மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில்லை. அய்ந்து மாதங்கள் கழித்து மாதவிலக்கு ஏற்படும் போது அதிக ரத்தப் போக்கும், தாங்கமுடியாத வலியும் வருகிறது. அதனால் பயந்துகொண்டு மாத்திரை வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். ஒரு நாள் விடுமுறை எல்லாம் வேண்டாம், வலி அதிகமாக இருக்கும் சமயங்களில் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்தாலே போதும்" என்று கூறும் 21 வயதான விமலா, கடந்த மூன்று மாதங்களாகத்தான் தங்கள் மில்லில் மாத்திரைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்.
இதுகுறித்து பேசும் தமிழ்நாடு ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் திவ்யா, பல நாட்களாகவே மில்லில் இது போன்ற மாத்திரைகள் அளிக்கும் வழக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், இப்பொழுதுதான் இதன் விளைவுகள் தெரிய வருகின்றன. மருந்துகள் வழங்கும் இடத்தில் மருந்து குறித்த அறிவுடையவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மேலும், மாத்திரைகளின்மீது பெயர் பொறித்த உறைகள் இல்லாமல் வெறும் மாத்திரைகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுமே தவறானது. அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் நேரத்து உடல் தொந்தரவுகள் வருவதில்லை. அப்படி பிரச்சினைகள் ஏற்படும் சில பெண்களுக்கு, ஷிப்ட் மாற்றி கொடுப்பது போன்ற மாற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால் அவர்கள் மறைமுகமாக மாத்திரைகள் சாப்பிடும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.
ஓய்வோ, விடுமுறையோ கேட்கும் பொழுது மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு விட்டு வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. எங்கள் சங்கச் செயலாளர், குழந்தைப் பேறு இல்லாத சிக்கலுக்காக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார், அவர் அடிக்கடி மில்லில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரை களை எடுத்துக்கொண்டிருந்தவர். இப்பொழுது அதனால்தான் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என்று பயப்படுகிறார். பெரும்பாலும் மில்லில் பணிபுரியும் பெண்கள் இரத்த சோகை, ஊட்டசத்துக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இது போன்று தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மேலும் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்கிறார் அவர்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (Southern India Mills Association - SIMA) தலைவர் செல்வராஜிடம் இது பற்றிக் கேட்டபோது "மாதவிடாய் காலங்களில் பெண்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பது குறித்த உயர்நீதிமன்ற விதிமுறைகள் உள்ளன. தமிழக அரசு, அதிகாரிகளும் சைமா, டாஸ்மா போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து இதனை பணியாளர்களிடம் வலியுறுத்துகின்றனர். யாரும் அதனை மீற முடியாது. அவ்வாறு மீறி நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இவை நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரச்சினைகள் குறித்து எங்களிடம் பேச விரும்பினால், நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்த பிரச்சினைகள் குறித்த கட்டுரையினை வெளியிட்ட தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம், இந்த மாத் திரைகளை ஆய்வுக்குட்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதில் பெயர்கள் குறிப்பிடாததால், ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் சிலரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்த பொழுது இதில் NSAID வகையினை சார்ந்த ibuprofen போன்ற மூலக்கூறுகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
ஸ்டிராய்டு அல்லாத வலிநிவாரண மாத்திரைகளான இவற்றை எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் வரையிலான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என, கோவையில் உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் ரஜனியிடம் கேட்டது பிபிசி தமிழ். "வலி நிவாரணிகள் உட்கொள்வதால் நேரடியாக மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது எனக் கூற முடியாது. எந்த NSAID (ஸ்டிராய்ட் அல்லாத வலி நிவாரணி) எடுத்துக் கொண்டாலும் மாதவிடாய் உதிரப் போக்கு குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
"வலி வந்த பின்பு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் குறித்து பேசுகிறோம். முதலில் ஏன் வலி வருகிறது? இந்த மாதிரி பணிபுரியும் பெண்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். இதுவும் மாதவிடாய் நேரத்து வலிக்கு ஒரு காரணம். கோவையில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில் பணிபுரியும் பெண்கள் சிகிக்சைக் காக அதிகம் வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் காலை உணவு உண்பதில்லை. ஒரு டீயும் சில பிஸ்கட்டுகளும்தான் இவர்களின் காலை உணவு. பிஸ்கட்டில் மைதாவும் சர்க்கரையும் உள்ளன. ஊட்டச் சத்து இல்லை. பணி புரியும் இடங்களில் நெருக்கடி, பொருளாதார சிக்கல்கள் என பல வாழ்வியல் அழுத்தங்களை இவர்கள் சந்திக்கின்றனர். இதுவே அவர்களின் பல உடலியல் சிக்கல்களுக்கு காரணமாகிறது.எனவே பெண்களின் சமுக, உளவியல் சிக்கல்களை புரிந்துகொண்டு இப்பிரச் சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறார் ரஜனி.
நன்றி:  பிபிசி தமிழ் இணையம், 9.7.2019


- விடுதலை நாளேடு, 11.7.19

செவ்வாய், 2 ஜூலை, 2019

பெண்கள் இரவுப் பணிக்கு செல்ல கோவா அரசு ஒப்புதல்

கோவா, ஜூன் 30  தொழிற் சாலைகளில் இரவு நேரங் களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத் துக்கு கோவா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படும்.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு இந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப் புதல் வழங்கியது. இதனை, பெண்கள் உரிமை ஆர்வலர்கள் வர வேற்றுள்ளனர். இதன்மூலம், கோவாவில் பெண்கள் அதிக எண்ணிக் கையிலான வேலைவாய்ப் புகளை பெற முடியும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 30. 6 .19

சம ஊதியம் கேட்டு பெண்கள் போராட்டம்

ஜெனிவா, ஜூன் 6- சுவிட்சர் லாந்தில் ஆண்களுக்கு நிக ராக பெண்களுக்கு சம ஊதி யம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14ஆம் நாள் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பெண் கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற் சங்கங்களும் பெண்கள் உரி மைகள் அமைப்பும் தெரிவிக் கின்றன.

‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலி யுறுத்தி மீண்டும் போராட் டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் பெண் களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறை வாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந் தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர் லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.அய்.ஏ. வெளியிட்ட அறிக் கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவ ரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண் களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைக ளையும் போராட்டக்குழுவி னர் வலியுறுத்த உள்ளனர்.

- விடுதலை நாளேடு, 6 .6.2019

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம்

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும்

திறந்து வைக்கலாம்:  தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூன் 7 தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  வரும் ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின்படி 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.

ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் முக்கிய நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.

பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள் யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த புதிய அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 7.6.19