
சென்னை கிண்டியில் உள்ள கிங் கொரோனா மருத்துவமனைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கினர்.
அப்போது, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொருளாளர் வி.கோவிந்தராஜலு ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: “கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது யூகம் என்று ஒரு சில மருத்துவ வல்லுநர்களும், வேறு சிலரோ, குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இரு வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது.
கொரோனா பேரிடர் முழுவதும் முடிந்த பிறகு, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு காலி பணியிடங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து, அந்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப் பணியில் இருக்கும் தகுதியானவர்களைக் கண்டறிந்து, அவர்களை பணியமர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்த பிறகுதான் பணி நிரந்தரம் தொடர்பான முடிவு செய்யப்படும்” என்றார்.